உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Thursday, March 14, 2019

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனின் பொய்யான தகவல் தொடர்பான கண்டன அறிக்கை




14-03-2019
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமானது கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னணி விளையாட்டுக்கழகமாக திகழ்வதோடு மட்டுமல்லாது வடமாகாணத்தில் சிறந்த உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கழக வீரர்கள், கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகளின், பெரும் ஆதரவோடு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் தமக்கான கட்டுமானங்களை உருவாக்கி, விளையாட்டில் மட்டுமல்லாது கிராமிய சமூக வேலைத்திட்டங்களிலும் பங்கெடுத்துவருகின்றது.

சிறிலங்கா Roll Ball தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு இந்த வருடம் பெப்ரவரி மாதம் இந்தியா கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்ற பன்னாட்டு போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புப் பெற்ற உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீராங்கனைகள் செல்வி சோபிகா மற்றும் செல்வி வினுசா ஆகியோருக்கு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் 18-02-2019 ஆம் திகதியன்று கௌரவிப்பு நிகழ்வொன்றையும், நிகழ்வில் சிறிய ஊக்கத் தொகையொன்றினையும் வழங்கியிருந்தது.

குறிப்பிட்ட நிகழ்விற்கு கழக உறுப்பினர்கள், வீராங்கனைகளின்; பெற்றோர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு பசுபதிப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.  இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களால் வழங்கப்பட்டதாக உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற தலா ஐம்பதாயிரம் ரூபா நிதியினை குறிப்பிட்ட வீராங்கனைகளுக்கு வழங்கியது மட்டுமல்லாது உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர் திரு ரஞ்சித் அவர்களால் வழங்கப்பட்ட தலா பத்தாயிரம் ரூபா நிதியும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட கௌரவிப்பு நிகழ்வு தொடர்பான முழுமையான செய்தியானது எமது விளையாட்டுக்கழக உத்தியோகபூர்வ முகநூல் (https://www.facebook.com/pg/Uruthirapuramsportsclub/photos/?tab=album&album_id=1921001264693043) மற்றும் வலைத்தளத்தில் (https://kiliusc.blogspot.com/2019/02/roll-ball.html) அன்றே (18-02-2019) வெளியிடப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை. இப்படியிருக்க, ஊடகவியலாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது முகநூலில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்கள் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அவரின்; கையாலேயே ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.

குறிப்பிட்ட வீராங்கனைகளுக்கென்று வழங்கப்பட்ட நிதியை, உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்திற்கு சொல்லப்பட்ட நிதி மூலத்தை மேற்கோள் காட்டியே உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வழங்கியிருந்த நிலையில், திரு தமிழ்ச்செல்வன் தனது தனிப்பட்ட அரசியல் நலன்களிற்காக உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தை தொடர்புபடுத்தி வெளியிட்டிருக்கும் பொய்யான செய்தி மிகுந்த வருத்தத்தையளிப்பதோடு குறிப்பிட்ட ஊடகவியலாளரின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுகிறது.

உருத்திரபும் விளையாட்டுக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிடாமல் தான்தோன்றித்தனமாக பொய்யான தகவல்களை தனது அரசியல் தேவைகளுக்காக வெளியிட்டிருக்கும் ஊடகவியலாளர் திரு தமிழ்ச்செல்வனுக்கு  எமது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம், கிளிநொச்சி

Share: